Jun 22, 2026 - 01:49 PM -
0
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ். தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை நேற்று (21) மாலை வந்தடைந்தது.
மே மாதம் 23 ஆம் திகதி தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.
வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இந்த புனித பாதயாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.
நேற்று மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்த பாதயாத்திரை குழுவினர் அங்கு தங்கியிருந்து இன்று (22) காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு பாதயாத்திரையினை ஆரம்பித்தனர்.
இந்நிலையில், உகந்தைமலை முருகன் ஆலயத்திலிருந்து யால காட்டு வழிப்பாதை திறக்கப்படும்போது அதன் ஊடாக பயணித்து 14 ஆம் திகதி கதிர்காம கந்தன் ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தெரிவித்தார்.
ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
15 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இத்திருவிழா, ஜூலை மாதம் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
--

