Jul 6, 2026 - 07:13 AM -
0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே நேற்று (05) மதியம் 1.00 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டிருந்தது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் 34 கைதிகள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
அவர்களில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர், சிறைச்சாலையின் கைதிகள் குழுவொன்று அதன் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கூரை இடிந்து விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கைதிகள் குறித்து கருத்து தெரிவித்த நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே, காயமடைந்த கைதிகளில் சுமார் 10 பேருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகக் கூறினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறைச்சாலைக்கு முன்னால் திரண்டு, கைதிகள் பற்றிய தகவல்களை அதிகாரிகள் வழங்கவில்லை எனக் கூறி அமைதியற்ற முறையில் நடந்துகொண்டனர்.
எவ்வாறாயினும், பொலிஸார் தலையிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்கியதுடன், மேலும் சிலரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் கருத்து வெளியிடுகையில்:
"நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதில் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் சிகிச்சை பெற்ற பின்னர் பல்லன்சேன முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2417 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறைச்சாலையின் உட்புற நிலைமை சிறைச்சாலை அதிகாரிகளால் சமரசத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்குப் புறம்பாக, சிறைச்சாலையின் வெளிப்பகுதி பாதுகாப்புக்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு மோதல் மட்டுமே தவிர, இதில் அதிகாரிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறேன். கைதிகளின் உறவினர்கள் இந்த நேரத்தில் எந்தவொரு பதற்றமோ அல்லது வீண் பயமோ கொள்ள வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தற்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உள்ளகப் படுத்தல் நடவடிக்கைகளுக்கு கைதிகளின் ஒத்துழைப்பையும் பெற்று இதனைச் சமரசம் செய்ய எம்மால் முடிந்தது என்பதை மேலும் கூறிக்கொள்கிறோம். அவர்கள் தற்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அந்த இடத்திலேயே கைதிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்தார்."

