Jul 6, 2026 - 03:48 PM -
0
அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்து, இலங்கையில் அடிப்பந்தாட்டத்தின் நீடித்த அமெரிக்க பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், தூதரகத்தின் Freedom 250 அடிப்பந்தாட்டத் தொடரின் ஒரு பகுதியாக, பயிற்சியாளர் ஜிம் டிமிக் ஞாபகார்த்த அடிப்பந்தாட்ட கிளாசிக் (Coach Jim Dimick Memorial Baseball Classic) போட்டித் தொடரினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த 03 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தது. கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற இவ்வாரம்ப நிகழ்வில்,விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், முன்னாள் மாணவர்கள், இலங்கை அடிப்பந்தாட்ட/மென்பந்து சங்கத்தின் அலுவலர்கள் ஆகியோருடன் அமெரிக்கத் தூதரகத்தின் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் இணைந்து கொண்டதுடன், போட்டித் தொடரினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைப்பதற்காக வைபவ ரீதியிலான முதல் பந்தை மரைன் பாதுகாப்புக் காவற்படையின் படைக்கல சார்ஜன்ட் கைல் அபாரிசியோ வீசினார்.
இலங்கையில் அமெரிக்க அடிப்பந்தாட்டத்தின் வளர்ச்சியுடன் பிண்ணிப்பிணைந்த வரலாற்றினைக் கொண்ட மூன்று பாடசாலைகளான, கொழும்பு ரோயல் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் காலி ரிச்மண்ட் கல்லூரி ஆகியவற்றின் அடிப்பந்தாட்ட அணிகளை இம்முக்கோணப் போட்டித்தொடர் ஒன்றிணைத்தது. ரோயல் கல்லூரியை 26 – 10 எனும் புள்ளிவிகிதத்தில் வென்று தனது ஆட்டத்தைத் தொடங்கிய கிங்ஸ்வூட் கல்லூரி, பின்பு ரிச்மண்ட் கல்லூரியிடம் 15 – 7 எனும் புள்ளிவிகிதத்தில் தோல்வியடைந்தது.
ரிச்மண்ட் கல்லூரி, ரோயல் கல்லூரிக்கு எதிராக 7 – 7 எனும் புள்ளிவிகிதத்தில் ஆட்டத்தை சமன் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. எனினும், இறுதிப்போட்டியில் கிங்ஸ்வூட் கல்லூரி 11 – 6 எனும் புள்ளிவிகிதத்தில் வெற்றி பெற்று Freedom 250 வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
“அமெரிக்கா தனது சுதந்திரத்தின் 250 ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகையில், எமது தேசத்தின் தலைசிறந்த பாரம்பரியங்களில் ஒன்றான அடிப்பந்தாட்ட விளையாட்டைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” என தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஹொவெல் கூறினார்.
“அமெரிக்காவின் தேசிய பொழுது போக்கான இவ்விளையாட்டானது பல தலைமுறைகளாக, குழுப்பணி, விடாமுயற்சி மற்றும் விளையாட்டு மனப்பான்மை ஆகியவற்றினூடாக, சமூகங்களை ஒன்றிணைத்துள்ளது. இன்று அவ்விளையாட்டு அமெரிக்கர்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையே நட்பினை வளர்ப்பதைத் தொடர்கிறது.
ஒரு அமெரிக்கப் பயிற்சியாளரின் தலைமைத்துவத்தினூடாக இலங்கைக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்பந்தாட்ட விளையாட்டானது, இளம் விளையாட்டு வீரர்களுக்குத் தொடர்ந்தும் உத்வேகமளித்து, எமது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை பலப்படுத்துவதையிட்டு நாங்கள் பெருமையடைகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்க வாழ்வின் ஓர் அங்கமாக அடிப்பந்தாட்டம் பின்னிப் பிணைந்துள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக, குடும்பங்கள் விளையாட்டு மைதானங்களில் ஒன்றுகூடியுள்ளன, முக்கியமான போட்டித்தொடர்கள் தொடர்பாக சிறார்கள் கனவு கண்டுள்ளனர், சமூகங்கள் இவ்விளையாட்டைச் சுற்றி ஒன்று திரண்டுள்ளன. இன்று, அமெரிக்காவின் தேசியப் பொழுதுபோக்கானது, குழுப்பணி, விளையாட்டு மனப்பான்மை மற்றும் இவ்விளையாட்டின் மீதான பகிரப்பட்ட அன்பு ஆகியவற்றினூடாக மக்களை ஒன்றிணைத்து, உலகெங்கிலுமுள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்குத் தொடர்ந்தும் உத்வேகமளித்து வருகிறது.
பயிற்சியாளர் பரிமாற்றங்கள், உபகரண நன்கொடைகள், இளைஞர் மேம்பாடு, சமூகத் தொடர்புகள் மற்றும் இலங்கை அடிப்பந்தாட்ட/மென்பந்து சங்கத்துடனான பங்காண்மைகள் என்பன உட்பட்ட, விளையாட்டு இராஜதந்திரத்தினூடாக இலங்கையில் அடிப்பந்தாட்ட விளையாட்டை வளர்ப்பதற்கு நான்கு தசாப்த காலமாக அமெரிக்கா உதவி செய்துள்ளது.
Freedom 250 அடிப்பந்தாட்டத் தொடரானது, அமெரிக்க சுதந்திரத்தின் 250ஆவது ஆண்டு நிறைவையும், இலங்கையில் அடிப்பந்தாட்ட விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டதன் 40 ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடுகிறது. எமது இரு நாடுகளுக்குமிடையிலான ஒரு பாலமாக அடிப்பந்தாட்டம் வகிக்கும் நீடித்த பங்கினை அங்கீகரிக்கும் வகையிலும், பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களை இணைப்பதில் விளையாட்டு இராஜதந்திரம் கொண்டுள்ள ஆற்றலுக்கான ஒரு உதாரணமாக விளங்கும் வகையிலும், வருடம் முழுவதும், இலங்கைப் பாடசாலைகள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் அமெரிக்கத் தூதரகம் ஒன்றிணைந்து பணியாற்றியது.
பயிற்சியாளர் ஜிம் டிமிக் பற்றி இலங்கையின் முதலாவது அடிப்பந்தாட்டப் பயிற்சி முகாம்களை நடத்துவதற்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஒரு முன்முயற்சியினூடாக இலங்கைகு வருகைதந்த, அனுபவமிக்க அமெரிக்க மரைன் கோர் வீரரும், தேசிய அடிப்பந்தாட்ட Hall of Fame பயிற்சியாளருமான ஜேம்ஸ் “ஜிம்” டிமிக் என்பவரால் 1985 ஆம் ஆண்டு இலங்கைக்கு அடிப்பந்தாட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இவ்விளையாட்டு ஆரம்பத்தில் வேரூன்றிய நான்கு கல்லூரிகளில் கொழும்பு ரோயல் கல்லூரியும் ஒன்றாகும். அக்காலகட்டத்தில் விளையாடிய பல வீரர்கள் இன்றும் இலங்கையில் அடிப்பந்தாட்ட விளையாட்டின் முன்னணி வீரர்களாகத் திகழ்கின்றனர். பயிற்சியாளர் டிமிக் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், ஆழ்ந்த ஈடுபாடும், இவ்விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதன் மூலம், இலங்கை அடிப்பந்தாட்ட விளையாட்டின் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக அவரை மாற்றியது.

