Jul 6, 2026 - 04:10 PM -
0
கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் சுமார் 470 மேற்பட்ட கிலோ மீற்றர் தொலைவு பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சுப்பிரமணி எனும் செல்லப்பிராணி சமூக வலைத்தளங்களில் பிரபல்யமாகியுள்ளதுடன் மனிதர்களைப் போன்று மாமிசமற்ற உணவுகளை உண்டு முல்லைத்தீவில் இருந்து தற்போது அம்பாறை மாவட்டத்தினை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் சுப்பிரமணி எனும் செல்லப் பிராணி காட்டிற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பாதயாத்திரை குழுமத்தின் தலைவரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுற்றாடலியலாளர் கந்தையா பிரியதர்சனி,
செல்லப்பிராணி பாதயாத்திரை செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் தடையல்ல என்பதுடன் காட்டிற்குள் பயணிக்கும் சகமனிதர்களின் பாதுகாப்பினையும் பாதயாத்திரை மேற்கொள்ளும் செல்லப்பிராணியின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு சுப்பிரமணியை காட்டிற்குள் செல்ல வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி வழங்காது என குறிப்பிட்டார்.
மேலும் எதிர்வரும் 10 ஆம் திகதி காட்டுப்பாதை திறந்தவுடன் சுப்பிரமணியை சுற்றாடலியலாளர்கள் குழாம் பொறுப்பெடுத்து வாகனம் ஊடாக கதிர்காமத்திற்கான முனையமான பிள்ளையாரடி எனப்படும் இடத்தில் பாதயாத்திரை குழுவிடம் சுப்பிரமணியை ஒப்படைக்க முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் உகந்தை காட்டுப்பாதை ஆரம்பிக்கும் பாணமை எனும் இடத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் இருவர் சிறுத்தை தாக்கி மரணமடைந்துள்ளதாகவும், இரண்டு செல்லப்பிராணிகள் சிறத்தை தாக்குதலுக்குட்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

