Jul 13, 2026 - 09:57 AM -
0
பாங்காக்கில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 27 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் இணையத்தில் பகிர்ந்த காணொளியில், தாய்லாந்து தலைநகரின் வடக்குப் பகுதியில் உள்ள 'நா லட்ப்ராவ்' மதுபான விடுதியின் முன் வாசலில் இருந்து பெரும் தீ கொழுந்துவிட்டு எரிவதும், புகை மண்டலங்கள் வெளியேறுவதும் தெரிகிறது.
அடர்த்தியான கருப்புப் புகை வானத்தில் பரவ, மக்கள் தப்பி ஓட முயற்சிப்பதும் காணப்படுகிறது. நள்ளிரவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 27 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்களில் பலர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த ஒரு இசைக்கலைஞர், மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முன்பு மேடைக்கு அருகில் இருந்த ஒரு சர்க்யூட் பிரேக்கரில் இருந்து புகை வெளியேறுவதை கண்டதாகவும், பின்னர் ஒரு வெடிச்சத்தம் கேட்டதாகவும், அடர்த்தியான புகை அந்த இடத்தை விரைவாக நிரப்பியதாகவும் தன்னிடம் கூறியதாக அனுதின் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் பலர் மதுபான விடுதியின் பின்புறத்தில் உள்ள கழிவறைகளில் கண்டெடுக்கப்பட்டதாக அனுதின் மேலும் தெரிவித்தார்.
