Jul 13, 2026 - 12:25 PM -
0
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 20 இற்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடி சாதனை படைத்தவர் எஸ். ஜானகி. இவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஜூலை 11 ஆம் திகதி காலமானார். அவரது உடல் மைசூரில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பாடகி எஸ்.ஜானகியின் இசைப் பயணம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு காதல் கதை அவர் வாழ்வில் உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஒரு பழைய பேட்டியில், ஜானகி தனது திருமணத்திற்குப் பின்னால் உள்ள சுவாரஸ்யமான கதையைப் பகிர்ந்துகொண்டார். ஆரம்ப காலத்தில், ஜானகி ஹைதராபாத்தில் உள்ள தனது மாமா சந்திரசேகர் வீட்டில் தங்கியிருந்தார். அவர் நாடகங்களுக்கு மேக்கப் கலைஞராக இருந்தார். நாடக இடைவேளைகளில் ஜானகி, லதா மங்கேஷ்கர் பாடல்களைப் பாடினால், அரங்கம் கைதட்டலால் அதிரும். ஒருநாள், எதிர்பாராதவிதமாக மாமாவின் சட்டைப் பையிலிருந்து ஒரு இளைஞரின் புகைப்படம் கீழே விழுந்தது.
அதுதான் ஜானகியின் வாழ்க்கையை மாற்றியது. அந்தப் புகைப்படத்தில் இருந்தவர், பிற்காலத்தில் அவரது கணவரான ராம் பிரசாத். ஜானகி அந்தப் புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துத் தன்னிடம் வைத்துக் கொண்டார். அந்த நொடியில் இருந்து ஒரு அழகான காதல் கதை தொடங்கியது.
சில நாட்களுக்குப் பிறகு, ராம் பிரசாத், ஜானகியின் மாமாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தார். அப்போதுதான் இருவரும் முதன்முறையாக நேரில் பார்த்துக் கொண்டனர்.
ஜானகியின் பாட்டைக் கேட்ட ராம் பிரசாத், 'இந்தத் திறமை நாடகங்களுக்குள் முடங்கிவிடக் கூடாது. இவர் திரைப்படங்களுக்குச் சென்றால் மிகப்பெரிய பாடகியாக வருவார். நம் நாடே பெருமைப்படும் கலைஞராக உருவெடுப்பார்' என்று நம்பிக்கையுடன் கூறினார். குறிப்பாக, ஜானகி பாடிய ரசிகா பலம் பாடல் ராம் பிரசாத்துக்கு மிகவும் பிடித்துப்போனது. அந்தப் பாடலே இருவருக்கும் இடையிலான பந்தத்தை மேலும் வலுப்படுத்தியது.
இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் 1959 இல் ஜானகி மற்றும் ராம் பிரசாத் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, ராம் பிரசாத் கணவராக மட்டுமல்லாமல், ஜானகியின் கனவுகளுக்கு உயிர் கொடுத்த நண்பராகவும் இருந்தார்.
ஒவ்வொரு ரெக்கார்டிங், கச்சேரி என ஜானகியின் இசைப் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவர் நிழலாக உடன் நின்றார். தனது வாழ்க்கையை மனைவியின் இசைப் பயணத்திற்காக அர்ப்பணித்த ராம் பிரசாத்தின் ஆதரவே ஜானகியின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. 'அவருடைய ஊக்கமும் நம்பிக்கையும் இல்லை என்றால், நான் இந்த நிலைக்கு வந்திருக்கவே முடியாது' என்று ஜானகி பலமுறை நன்றியுடன் கூறியுள்ளார்.
