Jul 24, 2026 - 01:40 PM -
0
வத்தளை, பல்லியவத்தை பகுதியில் அமைந்துள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர்.
நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூட்டை மட்டக்குளி மனோஜ் என்பவர் திட்டமிட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
போதைப்பொருள் வர்த்தகரான 'குடு ரொஷான்' என்பவரைக் குறிவைத்தே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
'குடு ரொஷானின்' சகோதரரின் மூன்று வயது மகளின் பிறந்தநாள் விழா நேற்றுப் மாலை நடத்தப்பட்டுள்ளதுடன், கொலைக்காக வந்த துப்பாக்கிதாரியும் அந்த விழாவிற்கு வந்த ஒருவரைப் போல நடித்து நடனமாடியவாறு வந்து பின்னர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், 'குடு ரொஷான்' அணிந்திருந்த ஆடைக்கு ஒத்த ஆடையை அணிந்திருந்த மற்றொருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
'குடு ரொஷான்' அந்தச் சமயத்தில் சிகரெட் புகைப்பதற்காகச் சென்றிருந்ததுடன், அவர் அவ்வாறு நடந்து செல்லும் விதம் வரவேற்பு மண்டபத்திலிருந்த சி.சி.டி.வி கெமராக்களில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிதாரியால் இருவரையும் சரியாக அடையாளம் காண முடியாத காரணத்தினால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான நபர், 'குடு ரொஷான்' உடன் விழாவிற்கு வந்திருந்த ஒருவராவார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பொரளை வனத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த வனத்தே சுமேத் என்பவராவார்.
சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிதாரி தப்பியோடும் சி.சி.டி.வி (CCTV) காணொளியும் வெளியாகியுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளை அடுத்து, நேற்றிரவே துப்பாக்கிதாரி வந்து சென்ற கார் ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களனிப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் அஸங்கவின் வழிகாட்டலின் கீழ் 5 பொலிஸ் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
