Jul 24, 2026 - 03:43 PM -
0
கட்டாய உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் சட்ட நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கான திறன் மற்றும் அந்தச் சட்டங்களை திறம்பட அமுல்படுத்துவது குறித்து, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்ட 301 ஆம் பிரிவின் கீழான விசாரணைகளின் இறுதி முடிவுகளின்படி, 18 நாடுகளுக்கு 10% தீர்வை வரி (Tariff) விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்வைக் கொள்கையின் கீழ் ஏனைய 42 நாடுகளுக்கு 12.5% தீர்வை வரி விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் குறிப்பிடப்பட்டபடி, இலங்கை 12.5% வரி பிரிவில் உள்ளடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, அவ்வாறு நடந்திருந்தால், முக்கிய போட்டி நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும்.
எவ்வாறாயினும், இந்த மாதத்தின் முற்பகுதியில் இலங்கையால் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்திற்கு (USTR) சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்ததன் பின்னர், இலங்கை 10% வரி பிரிவில் உள்ளடக்கப்பட்டிருப்பது குறித்து ஒன்றிணைணந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறது. அதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா மற்றும் கம்போடியா உள்ளிட்ட முக்கிய போட்டி நாடுகளுடன் சமமான 10% வரி விகித பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
போட்டி நாடுகளுடன் சமமான வரி விகிதத்தைப் பெறுவதற்கு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) நீண்ட காலமாக தொடர்ச்சியாகவும் செயற்பூர்வமாகவும் மத்தியஸ்தம் செய்து வந்த முக்கிய விடயம் என்று அந்த மன்றம் குறிப்பிடுகிறது. இந்த முடிவைப் பெறுவதற்காக அமெரிக்க அதிகாரிகளிடம் இலங்கையின் நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியது.
அத்துடன், அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க அவர்களுக்கும் கே. ஏ. விமலேந்திரராஜா அவர்களுக்கும் சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்று அந்த மன்றம் வலியுறுத்துகிறது. அவர்கள் வர்த்தகத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகக் குழுவுடன் இணைந்து கடந்த சில மாதங்களாக இந்தப் பணியை வெற்றிகரமாக முடிப்பதற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையின் ஆடைத் தொழில் கடுமையான போட்டி நிறைந்த சர்வதேச சந்தையில் செயற்படுகின்றது, மேலும் வரி விகிதத்தில் 2.5% அளவிலான சிறிய மாற்றம் கூட போட்டி நிறைந்த ஒரு நாட்டிற்கு ஓடரை இழக்கச் செய்வதற்கோ அல்லது பெறுவதற்கோ தீர்க்கமான காரணியாக அமையலாம். எனவே, பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா மற்றும் கம்போடியா போன்ற முக்கிய போட்டி நாடுகளுக்கு உரிய வரி மட்டத்திற்கு சமமான வரி விகிதத்தை இலங்கைக்கும் பெற்றுக்கொள்வது, இந்நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாய் ஆதாரமான ஆடைத் தொழிலின் போட்டித்தன்மையைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாததாகும். குறிப்பாக, நாடு முழுவதிலும் பெருமளவிலான பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இத்தொழிலின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு அந்த வரி சமத்துவம் மிகவும் முக்கியமானது என்று ஒருங்கிணைந்த ஆடை சங்க மன்றம் வலியுறுத்துகிறது.
இந்த முடிவு எதிர்பாராத விதமாகக் கிடைத்த ஒன்றல்ல, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் முதல் வாஷிங்டனில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட பிரதிநிதித்துவங்கள் வரை, தொழிற்துறை மற்றும் அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியாகவும் ஒருங்கிணைந்தும் செயற்பட்டதன் பயனாகவே இந்த வெற்றியை அடைய முடிந்தது என்று ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் தெரிவிக்கிறது. இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் குறித்து தனியார் துறையும் அரசாங்கமும் நெருங்கிய கூட்டாண்மையில் செயற்பட்டபோது பெறக்கூடிய முடிவுகளுக்கு இது ஒரு வலுவான உதாரணம் என்றும் அந்த மன்றம் வலியுறுத்துகிறது.
வியாழக்கிழமை (23-07-2026) அன்று அடைந்த முன்னேற்றத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கும், இலங்கையின் ஆடை மற்றும் ஜவுளித்துறைக்கு சர்வதேச சந்தையில் சமமான போட்டித்தளத்தில் செயற்படுவதற்குத் தேவையான பின்னணியை உறுதிப்படுத்துவதற்கும், அரசாங்கத்துடன் நிலவும் இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணித்துள்ளோம் என ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்தார்.
