Jul 24, 2026 - 05:26 PM -
0
பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களின் போது நபர்களைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவ்வழக்குகளை எதிர்கொள்வதற்காகத் தான் மீண்டும் பங்களாதேஷிற்கு வருகை தரவுள்ளதாக ஹசீனா வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்து சில நாட்களுக்குப் பின்னரே ஜனாதிபதியின் இந்த இராஜினாமா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள பாராளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமட் திரும்பி வந்த பின்னர், ஜனாதிபதி தனது ராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
