Jul 24, 2026 - 07:54 PM -
0
செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய தினம் (23) அடையாளம் காணப்பட்ட, மழை அங்கியுடனான சிறுவனின் எலும்புக்கூடு ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே அகழ்ந்தெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, குறித்த எலும்புக்கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள் தெரிந்திருந்தால், அது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
"செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட எலும்புக்கூடு இன்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்படவில்லை. அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே, அதனை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறித்த எலும்புக்கூடு சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம் இருப்பதனால், அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் நீதிமன்றப் பதிவாளருக்கோ, சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இத்தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், இந்த அகழ்வுப் பணிகள் தொடர்பிலான மேலும் சில தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது." என்றார்.
