Jul 25, 2026 - 02:13 PM -
0
ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல் கோவையின் ஒரு பிரிவைத் திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, குறைந்தபட்சம் 20 வருட காலப்பகுதிக்கு உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பணியாற்றியிருக்காவிட்டால், ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படக்கூடாது என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னர் இருந்த வழிகாட்டல் கோவைக்கு அமைவாக, ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 20 வருட காலம் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பணியாற்றியிருக்க வேண்டும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டிருந்த போதிலும், விசேட சந்தர்ப்பங்களில் ஏனைய அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ள, 15 வருட சேவைக்காலத்தைக் கொண்ட உயர்நீதிமன்ற சட்டத்தரணிகளையும் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிப்பது குறித்து பரிசீலிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கு உரிய வகையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தகுதியுடைய நபர்கள் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கு விண்ணப்பிக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
