Jul 25, 2026 - 03:20 PM -
0
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண பாராளுமன்றத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பாக மேற்கொண்ட கூற்றுக்கள் அடிப்படையற்றவை மற்றும் மூர்க்கத்தனமானவை என தாம் நம்புவதாக "தினன தக்குண" கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கூட்டமைப்பு, குறித்த கூற்று தொடர்பில் தமது பலத்த கவலையை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அசித நிரோஷண, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் அரசியல் ரீதியிலான கொடுக்கல் வாங்கல் ஒன்று இருப்பதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த சட்டத்தரணிகள் சங்கம், பாராளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்ட குறித்த கூற்றுக்கள் அடிப்படையற்றவை மற்றும் மக்களை வழிகெடுக்கும் நோக்கம் கொண்டவை என வலியுறுத்தியிருந்தது.
பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு வெளியிடப்பட்ட அக்கூற்றை, பாராளுமன்றத்திற்கு வெளியே வெளியிடுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்திருந்தது.
அதற்கமைய, குறித்த சவாலை ஏற்றுக்கொண்டு தனது அரசியல் ஒழுக்கத்தைக் காட்டுமாறு பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷணவிடம் "தினன தக்குண" கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் சட்டத்தரணிகள் சமூகம், சட்டத் துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவத்திற்கு ஏற்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் ஜனநாயகம், நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் போராட்டம் நடத்தும் உரிமை உள்ளிட்ட மக்களின் மனித உரிமைகளுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக சட்டத்தரணிகள் சங்கம் பயமின்றி அல்லது சந்தேகமின்றி முன்னின்றதாக "தினன தக்குண" கூட்டமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
