Jul 25, 2026 - 04:17 PM -
0
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற காரும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்து காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதியூடான போக்குவரத்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பாதிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார், போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
விபத்தில் கதிர்காமத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேரும், லொறியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
