Jul 26, 2026 - 11:57 AM -
0
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட "டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் நுவரெலியா, லிந்துலை மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்கு செல்லும் பகுதியில் கொத்தமலை நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காணப்பட்ட பலமைவாய்ந்த இரும்பு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்தது.
இதன் காரணமாக, அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது இதனால் மக்களின் போக்குவரத்து தேவைகளுக்கு தற்காலிகமாக பாலம் ஒன்றை அமைத்துக் கொடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
இதனால், லிந்துலை - ஹென்போல்ட் தோட்டத்திற்கு கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மிளகுசேனை, ஊட்டுவெளி, சென்ட்ரல் கிளாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 800 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இன்று வரை உள்ளனர் .
சிறியளவில் மழை பெய்தாலே ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து, மக்கள் அந்த வழியாகச் செல்ல முடியாத நிலை உருவாகிறது.
இவ்வாறான சூழ்நிலைகளில், அவர்கள் 5 கிலோ மீற்றர் தூரம் சுற்றுச் வீதியை பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கிராம மக்கள் முழுமையாக வெளியேற முடியாத அபாய நிலையும் உருவாகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கோடை காலத்தில் ஓரளவு நீர் வற்றி காணப்பட்டாலும், மழைக் காலங்களில் ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதால் அன்றாட கடமைகளை செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்றாட போக்குவரத்தினை மேற்கொள்ளவும், பாடசாலை செல்வதற்கும் அவசர மருத்துவ தேவைகளை பெறுவதற்கும் இயலாமல் தவிக்கிறார்கள் ஆபத்தினையும் உணராது மாணவர்கள் தமது பாதணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றை கடந்து, மறுபுறம் கால்களை சுத்தம் செய்து மீண்டும் பாதணிகளை அணிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அரசியல் அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு சென்றுள்ள போதிலும் சீரமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகள் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீது அக்கறை கொண்டு தற்காலிகமாக பாலம் அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--
