Jul 27, 2026 - 06:25 AM -
0
பெர்லினின் பேரணி நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டோர் மீது வேன் ஒன்றினால் மோதி தாக்குதல் நடத்திய சந்தேகநபரை ஜேர்மனிய பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பின்னணி கொண்ட 21 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
டியர்கார்டன் பூங்காவில் சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இந்த வாகனத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் சிலர் தாக்குதல்தாரி பயன்படுத்திய கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் கண்டுபிடித்த நிலையில், அவர் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும் அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்ட போதிலும் சந்தேகநபர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஜேர்மனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
