Jul 27, 2026 - 04:55 PM -
0
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, இந்திய உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கட்டுமானத் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கவனஞ்செலுத்தப்பட்டது.
மேலும், அத்திட்டங்களின் ஒப்பந்தங்களைப் புதுப்பித்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து, பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல், மீன்பிடி, நீரியல் மற்றும் கடற்றொழில் வளங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய அமைச்சுகளின் கீழ் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர, 'டித்வா' சுறாவளி பாதிப்புகளிலிருந்து மீள்வதற்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் டொலர் கடன் மற்றும் உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
குறித்த திட்டங்களின் முன்னேற்றம் குறித்துக் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் தனியான அலகு ஒன்றை நிறுவுவது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
