Jul 28, 2026 - 10:35 AM -
0
தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு, சந்தையில் உள்ள நுகர்வோர் பொருட்களின் தரத்தையும் தரநிலையையும் பரிசோதிக்கும் விசேட திட்டமொன்று இன்று (28) நடைமுறைப்படுத்தப்படுவதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட திட்டம் இன்றைய தினம் புறக்கோட்டை பொதுச் சந்தை வளாகத்தை மையமாகக் கொண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன குறிப்பிட்டார்.
இதன்போது சந்தையில் விற்பனைக்கு உள்ள உணவுப் பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் உரிய தரநிலைகளுக்கு அமைய உள்ளனவா என்பது பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக நுகரப்படும் உணவுப் பொருட்களில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக் பொருட்கள் அடங்கியுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தரப் பரிசோதனைத் திட்டத்திற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள இலங்கைத் தரக்கட்டளைகள் நிறுவனம் (SLS) மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ITI) உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது பொருட்களின் நிலை குறித்து நுகர்வோருக்கு நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் அது தொடர்பான தொழில் முயற்சியார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன,
"முக்கியமாக உணவுப் பொருட்கள், அதேபோல் மின்னணுப் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என அனைத்திலும் தரநிலை பேணப்படுகிறதா எனப் பார்ப்பதே இதில் முதன்மையாகச் செய்யப்படுகிறது. அங்கு உணவில் நச்சுத் தன்மை உள்ளதா என்றும், ஏனைய பொருட்களின் தரம் சரியாக உள்ளதா என்றும் பரிசோதிப்பதற்காக எமது அமைச்சின் கீழ் உள்ள SLS நிறுவனம், ITI நிறுவனம் உட்பட எமக்குரிய அனைத்து நிறுவனங்களுடனும் நாங்கள் புறக்கோட்டைக்குச் செல்கிறோம். புறக்கோட்டைக்குச் சென்று அங்குள்ள நிலைமை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை வழங்குவோம். அத்துடன் வியாபாரம் செய்வோரையும், அது தொடர்பான தொழில் முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வூட்ட நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார்.
