Jul 28, 2026 - 01:36 PM -
0
தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவில் கலந்துகொள்ளவுள்ள காவடி நடனக் குழுக்கள் சிலவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (28) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெரஹெரா ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினரின் சுமார் 1,500 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதில் கலந்துகொள்ளும் அனைத்து காவடி குழுக்களும் உடனடிப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளன.
தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவில் காவடி குழுக்களைப் பங்கெடுக்கச் செய்வது தொடர்பில் இரு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலைமை, தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் வரை தீவிரமடைந்தது.
உருவான இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரா ஊர்வலத்தில் காவடி நடனக் குழுக்கள் பங்கேற்பதைத் தற்காலிகமாகக் இரத்துச் செய்யுமாறு பொலிஸ் மா அதிபரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறை மாவட்டச் செயலாளருக்குப் பரிந்துரை ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) மாலை மாத்தறை மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்றது.
கடந்த ஆண்டுகளில் காவடி நடனங்களில் ஈடுபட்ட அனைத்துக் குழுக்களுக்கும் இம்முறையும் அனுமதி வழங்குவதற்கு அங்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த பெரஹெரா ஊர்வலம் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
