Jul 29, 2026 - 03:02 PM -
0
தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடிப் படகுகளின் தொடர்ச்சியான எல்லை மீறல், கடல் வளக் கொள்ளை மற்றும் வடக்குக் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாரிய பாதிப்புகளைக் கண்டித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் குறிகாட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) கடற்தொழிலாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீவகக் கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கண்ணாடி இழைப் படகுகளில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டவாறு கடற்தொழிலாளர்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த இழுவைமடிப் படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மனிதாபிமானமற்ற முறையில் கடல் வளங்களைச் சுரண்டுவதோடு, வடக்கு மற்றும் தீவகத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்களைச் சேதப்படுத்தி வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால் வடக்குக் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாளாந்த வருமானமும் பெருமளவில் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்தப் பிரச்சினையில் கடற்றொழில் அமைச்சர் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், தொடர்ச்சியாக இடம்பெறும் எல்லை மீறல்கள் மற்றும் இழுவைமடிப் படகுகளின் சட்டவிரோதச் செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“கடலுக்காக நீதி வேண்டும், எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, கடலில் வாழ்வாதாரம் மேற்கொள்ளும் கடற்தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
--
