Jul 29, 2026 - 04:44 PM -
0
கறுப்பு ஜூலையின்போது நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் உண்டான வரலாற்றுக் காயங்களை ஆற்றுவதுடன், இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஹட்டனில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய சகோதரத்துவ தினத்தை முன்னிட்டுச் சோசலிச இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, 'இனவாதம் வேண்டாம் – இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபடுவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று (29) ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலுள்ள புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றது.
நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமதத் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் மஞ்சுல சுரவீர ஆகியோரும் கையெழுத்திட்டனர். பின்னர், பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்.
இதனுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இதேவேளை, இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி,
கடந்த காலங்களிலும் தற்போதும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அரசியல் இலாபங்களுக்காகப் பிரித்து வைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த கால இன வன்முறைகளால் ஏற்பட்ட கசப்பான நினைவுகளைக் கடந்து, எதிர்காலத்தில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.
--
