Aug 2, 2026 - 06:57 PM
சுமார் 250 பயணிகளுடன் பயணித்த இந்தோனேசிய பயணிகள் கப்பலொன்று அந்நாட்டு கடற்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விபத்தில் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 41 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிழக்கு ஜாவாவின் சுராபாயாவில் இருந்து தெற்கு சுலவேசியின் மகசார் நோக்கிப் பயணித்த இக்கப்பல், மதுரா தீவுக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
கப்பலில் திடீரென தீ பரவியதையடுத்து உடனடியாகச் செயற்பட்ட அதன் மாலுமி, இது குறித்து அந்நாட்டு தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகத்திற்கு உடனடியாக அறிவித்து உதவியைக் கோரியுள்ளார்.
மாயமானவர்களைக் கண்டறிவதற்கும், விபத்துக்குள்ளான ஏனைய பயணிகளை மீட்பதற்கும் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரும் நிவாரணக் குழுவினரும் இணைந்து தற்போது விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.

