Header Logo
செய்திகள்
வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கப்படுமா? ஆளுநர் விளக்கம்

Aug 11, 2026 - 10:09 PM

வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கப்படுமா? ஆளுநர் விளக்கம்
Mobitel inner

மே மாதத்தில் மேற்கொண்ட பெரிய மற்றும் எதிர்பாராத வட்டி விகித அதிகரிப்பிற்குப் பின்னர், இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கை வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பணவீக்கம் தற்போதைய மட்டங்களிலேயே உச்சத்தை எட்டி, அடுத்த ஆண்டில் 5 சதவீத இலக்கை நோக்கி மீண்டும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் போரினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தனது முதல் அதிகரிப்பாக கடந்த மே மாதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி உயர்வைக் கொண்டுவந்து மத்திய வங்கி சந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மீட்சியில் அதன் அறிவுறுத்தலில் தெரிவு செய்யப்பட்ட ஆபத்தான வழிமுறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

பணவீக்கம் 7 சதவீதமாக உயரும் என மத்திய வங்கி எதிர்பார்த்ததால், மே மாத வட்டி உயர்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும், தற்போதைய பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறினார். 

நாங்கள் எதிர்பார்த்ததிலிருந்து ஏதேனும் விலகல்கள் இருக்கிறதா என்பதை நாங்கள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார். 

எதிர்காலத்தில் நிதியியல் கொள்கையை இறுக்குவது அல்லது தளர்த்துவது பற்றிய எந்தவொரு முடிவும், ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட வேறுபட்ட பாதை உருவாகிறதா என்பதன் அடிப்படையிலேயே அமையும். 

இதுவரை அப்படி எதுவும் நாங்கள் காணவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள் காரணமாக, இலங்கையின் முக்கிய பணவீக்கச் சுட்டெண் ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகப் பதிவாகியதுடன், இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய அதிகரிப்பாகும். 

நவம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் 8 சதவீதமாக உயரும் என சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மே மாத வட்டி அதிகரிப்பின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் வெளிப்பட 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும், அடுத்த ஆண்டின் முதலரை பகுதியில் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கிற்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் வீரசிங்க கூறினார். 

பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் ஆளுநர் வீரசிங்கவின் இந்த சமீபத்திய கருத்துக்கள், மத்திய வங்கி அதன் நிதியியல் கொள்கையை குறைந்தது ஆண்டின் எஞ்சிய பகுதி வரை 8.75 சதவீதத்திலேயே நிலையாக வைத்திருக்கத் தயாராக இருப்பதை உணர்த்துகின்றன. 

மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது. 

பெப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் காரணமாக முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோக வழிகள் தடைப்பட்டு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் கணக்குகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, அரசாங்கம் எரிபொருள் விலைகளை 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதுடன், ரேஷன் முறையை அறிமுகப்படுத்தி, புதன்கிழமைகளைப் பொது விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara