Aug 15, 2026 - 07:45 AM

டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபருடன் சேர்ந்து மேலும் இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் விசாரணைக்காக அந்தப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பிச் சென்றிருந்தார்.
ஈரான் - அமெரிக்க போரின் போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மீது தாக்குதல் நடத்த ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது கைபேசியில் வைத்திருந்த குற்றத்திற்காக கடந்த மே மாதம் 26 ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், பயங்கரமான மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருத்தல், சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக இருத்தல் மற்றும் சேதம் / தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளில் தெரியவரும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.























