Aug 15, 2026 - 09:27 AM

வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க, தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்துவதை மறுத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
இவரது தாய் கடந்த 12 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கரந்தெனிய சுத்த என்பவரால் இந்தக்கொலை வழிநடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுவதுடன், கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாகவே இது நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இவ்வாறான பின்னணியில், வெலிசறை அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள் பெக்கோ சமனுக்கு அவரது தாயின் கொலை குறித்துச் சிறைச்சாலை அதிகாரிகள் அறியப்படுத்தியிருந்தனர்.
இதன்போது, தாயின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பெக்கோ சமனின் நலன் குறித்து விசாரிக்கச் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டாம் என அவரின் தாயாருக்கு 'சுத்த' அச்சுறுத்தல் விடுத்திருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் சிறைச்சாலைக்குச் சென்று வந்தமையே இந்தக் கொலைக்கான மற்றொரு காரணம் எனப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.























