Aug 17, 2026 - 12:51 PM

பாடசாலை விடுமுறைக் காலத்துடன் பட்டம் விடும் போது ஏற்படும் விபத்துக்கள் அதிகமாக பதிவாகி வருவதால், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பட்டம் விடுவது பிரபலமாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக பட்டம் விடுவதால் பலத்த காயங்கள் மட்டுமன்றி உயிராபத்துகளும் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும் போது கீழே விழும் அபாயம் இருப்பதாகவும், குழுக்களாக இணைந்து பட்டம் விடும் போது மோதிக் கொள்வதாலும், கீழே விழுவதாலும் விபத்துக்கள் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உயர் அழுத்த மின் கம்பங்களுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர கூறுகிறார்.
இவ்வாறான மின் அதிர்ச்சிகள் காரணமாக கைகள், தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதியில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
மேலும், மின்கடத்தும் தன்மை கொண்ட நூல்கள் உயர் அழுத்த மின்கம்பிகளுடன் உரசும் போது உடனடியாக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், மின்கம்பிகள் உள்ள பகுதிகளில் சிறுவர்கள் பட்டம் விடுவதைத் தவிர்க்க பெற்றோர்களும், பெரியவர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் சிமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் மேலும் அறிவித்துள்ளார்.
சிறுவர்களின் பொழுதுபோக்கு போலவே அவர்களின் உயிர் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பட்டம் விடுகையில் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுப்பதற்கு ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.























