Aug 17, 2026 - 06:48 PM



தனமல்வில தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிகவெவ பகுதியில் கஞ்சாத் தோட்டமொன்றைச் சோதனையிட்டு, அதன் உரிமையாளர்களிடம் ரூபா 5 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பிணையில் செல்ல அனுமதித்து வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவருக்கு தலா 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சிலர் அண்மையில் நிகவெவ பகுதியில் சோதனையொன்றை நடத்தியுள்ளதோடு, இதன்போது அந்த கஞ்சாத் தோட்டத்தின் உரிமையாளரிடமிருந்து ரூபா 5 இலட்சம் இலஞ்சம் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொனராகலை வலய ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள், ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் சாரதி எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

























