Aug 20, 2026 - 10:28 AM





உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா இரவு முழுவதும் நடத்திய தொடர் ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாரிய தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் களஞ்சியசாலைகள் இலக்கு வைக்கப்பட்டதாக உக்ரைனின் மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 33 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீட்புக்குழுவினர் ஏற்கனவே இடிபாடுகளிலிருந்து உயிர் தப்பிய இருவரை மீட்டுள்ளனர்.
இதற்கிடையில், உக்ரைனுடனான வடக்கு எல்லையில் ஒரு ட்ரோன் தமது எல்லைக்குள் நுழைந்ததாகவும், இதனால் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் ருமேனியா தெரிவித்துள்ளது.
கலாட்டி (Galați) நகருக்கு கிழக்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், ருமேனிய தேசிய வான்பரப்பிற்குள் ஒரு ட்ரோன் நுழைந்தது என ருமேனிய பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த ட்ரோன் ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும், இதனால் எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

























