Aug 20, 2026 - 03:47 PM





காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (20) யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன், சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் அதிகளவில் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வயது, காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மையை கண்டறிந்து, அவர்களது உறவினர்களுக்கு உரிய பதிலை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

























