Aug 20, 2026 - 03:45 PM





முறையற்ற முறையில் வெளிநாட்டுச் கடவுச்சீட்டைப் பெற்றமை தொடர்பில் குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சஷி வீரவங்சவை, முன்பிணை அடிப்படையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பை வாசிப்பதற்காக வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சஷி வீரவங்சவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதாகப் பிரதான நீதவான் சுட்டிக்காட்டினார்.
அந்தத் தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்ததாகவும் பிரதான நீதவான் தெரிவித்தார்.
எனினும், மேல் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகத் தமது கட்சிக்காரர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளதாகச் சஷி வீரவங்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மாதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அதுவரை தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைய, மேல் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக 42 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு பிரதிவாதிக்கு உள்ள உரிமையின் அடிப்படையில் அவர் அந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளதால், அது தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சஷி வீரவன்சவை முன் பிணையில் விடுவிக்கப் பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த வழக்கினை மீண்டும் செப்டம்பர் 27 ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

























