Aug 20, 2026 - 04:09 PM





2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – தீவகம், அல்லைப்பிட்டி இராணுவப் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை திருச்செல்வம் நிஹால் ஜிம் பிறவுண் மற்றும் அவருடன் பயணித்த வென்சிலோஸ் வின்சன் விமலதாஸ் ஆகியோரின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) அல்லைப்பிட்டியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து புனித பிலிப்புநேரியார் ஆலயம் வரை இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஆலயத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரைகளும் இரங்கல் திருப்பலியும் இடம்பெற்றன.
நிகழ்வின் நினைவுரைகள் நிறைவடைந்த பின்னர், அருட்தந்தை ஜிம் பிறவுண் மற்றும் விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமெனக் கோரும் அறிக்கையை யாழ். மறைமாவட்ட நீதி சமாதானத்திற்கான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் வாசித்தார்.
தொடர்ந்து யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை ஜிம் பிறவுண் மற்றும் திரு. விமலதாஸ் ஆகியோரின் நினைவாக ஆலய வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
யாழ். மறைமாவட்ட நீதி சமாதானத்திற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை ஜிம் பிறவுண் மற்றும் திரு. விமலதாஸ் ஆகியோர் இறுதியாக அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடிக்கு அருகில் காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அவர்கள் எவ்வாறு காணாமலாக்கப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பில் குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் தெளிவான உண்மை இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என ஆணைக்குழு கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ மற்றும் காவல்துறை பதிவுகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அல்லைப்பிட்டியில் பணியாற்றிய இராணுவ மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பான சாட்சிகள் மற்றும் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அருட்தந்தை ஜிம் பிறவுண் மற்றும் விமலதாஸ் ஆகியோருக்கு என்ன நேர்ந்தது என்பதை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என்றும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நீண்டகாலமாக துயரத்திலும் நிச்சயமற்ற நிலையிலும் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு உரிய ஆதரவும் நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
“நாம் பழிவாங்கலைக் கோரவில்லை, உண்மையையும் நீதியையும் மட்டுமே கோருகின்றோம்” என ஆணைக்குழு தனது அறிக்கையில் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.
இருபது ஆண்டுகளாகியும் உண்மை வெளிவராத நிலையில், இந்த வழக்கு மறக்கப்படவோ, மௌனத்தில் புதைக்கப்படவோ கூடாது எனத் தெரிவித்துள்ள யாழ். மறைமாவட்ட நீதி சமாதானத்திற்கான ஆணைக்குழு, அருட்தந்தை ஜிம் பிறவுண் மற்றும் திரு. விமலதாஸ் ஆகியோரின் காணாமலாக்கம் தொடர்பில் உண்மையை வெளிக்கொணரவும், நீதியை நிலைநாட்டவும் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் தொடர்ந்தும் தலையிட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நினைவேந்தல் நிகழ்வு, காணாமலாக்கப்பட்ட இருவரையும் நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமல்லாது, உண்மை வெளிப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும், பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற தொடர்ச்சியான மக்களின் கோரிக்கையையும் மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அல்லைப்பிட்டி பங்கும் யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

























