Aug 24, 2026 - 05:53 PM





சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க ஆட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், போதைப்பொருள் தொடர்பில் கைது செய்வது முதல் வழக்குத் தாக்கல் செய்வது வரையிலான பொலிஸ் திணைக்களத்தின் செயல்முறைகள் குறித்தும், அதற்காக நிலவும் சட்டரீதியான தடைகளை நீக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது போதைப்பொருள் தொடர்பான வழக்கு நடவடிக்கை தாமதங்கள், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் அதன் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பில் நபர்களைக் கைது செய்வது மட்டுமன்றி, போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், தொலைபேசி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறைகளைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகளுக்குத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்குப் பொருத்தமான ஒழுங்குமுறை முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, சமூக அடிப்படையிலான மறுவாழ்வுத் திட்டத்தைப் பலப்படுத்துதல், குற்றங்களைத் தடுப்பதற்காகப் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் நிலவும் சட்டங்களைக் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப திருத்துவதன் அவசியம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.
மேலும், குற்றவியல் விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காகப் பொலிஸ் திணைக்களத்திற்குள் நவீன தடயவியல் மருத்துவ ஆய்வகமொன்றை நிறுவுவதன் அவசியம்பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அறிவியல் சான்றுகளைப் பகுப்பாய்வு செய்வதை விரைவுபடுத்துவதன் மூலம் வழக்கு நடவடிக்கைகளை வேகப்படுத்தி சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், பொலிஸ் அதிகாரிகளின் நலன், தொழில்முறைப் பயிற்சி, புலனாய்வுத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பொலிஸ் செயல்திறன் மதிப்பீட்டு முறைகளைச் செம்மைப்படுத்துதல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது.























