Aug 26, 2026 - 07:48 AM





நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் சிறுமி ஒருவரும் இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (25) மாலை அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் பிரிவின் கிளை வீதி ஒன்றில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர், பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுமியாவார்.
32 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று மாலை மாத்தளை, ரத்தோட்டை வீதியின் வேரகம பகுதியில் மாத்தளை திசை நோக்கி பயணித்த ஜீப் வண்டியொன்று, எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டியை செலுத்திய பெண்ணும், அதன் பின்னால் பயணித்த பிள்ளையும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புஞ்சி ரத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணாவார்.
ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் இங்குறுகட சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியில் இருந்து இங்குறுகட நோக்கிச் சென்ற டிப்பர் லொறிக்கு முன்னால் பாதசாரிகள் கடவை வழியாக வீதியைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பர் லொறியில் மோதி பலத்த காயமடைந்தார்.
பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணாவார்.
டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























