Aug 27, 2026 - 06:03 PM





"அரசியலமைப்பின் 22வது திருத்தம்" என பெயரிடப்பட்டுள்ள சட்டமூலத்தினால் நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகள், நலன்கள் தொடர்பில் கடுமையான பிரச்சினைகள் எழுவதனால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொள்கை ரீதியான அடிப்படையில் அதற்கு எதிரான நிலப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறித்த திருத்தத்தின் அரசியலமைப்புத் தன்மையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிடுகிறது.
இச்சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டால், அத்திருத்தத்தின் மூலம் பலனடையும் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போதைய பிரதம நீதியரசரே இருப்பார் என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக் காலம் 2026 டிசம்பர் 1 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால், அவரது பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவே இத்திருத்தம் விரைவாக முன்னெடுக்கப்படுவதாக பரவலான அபிப்பிராயம் நிலவுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.























