Header Logo
SLIC
செய்திகள்
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கப் புதிய அதிகாரசபை!

Aug 28, 2026 - 12:05 PM

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கப் புதிய அதிகாரசபை!
Mobitel Inner 1278
EDEX Inner

மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயா புரம்’ வீட்டுத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


மத்திய மலைநாட்டை பழைய நிலைக்குக் கொண்டுவர பல தசாப்தங்கள் ஆகலாம் என்றபோதிலும், இடம்பெற்று வரும் அழிவுகளைத் தடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.


மத்திய மலைநாடு இலங்கையின் இதயம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது கண்முன்னே அழிந்து வருவதாகவும்; மலை சரிவுகள், நீரூற்றுகள் வற்றுதல், ஆறுகள் மற்றும் ஓடைகள் தூர்ந்துபோதல் என்பவற்றை நாம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


அதற்கமைய, இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபைக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.


"நமது நாட்டின் எதிர்காலத்தின் முக்கிய பகுதி மத்திய மலைநாட்டிலேயே தங்கியுள்ளது. நமது எதிர்காலத்திற்காக மத்திய சூழலைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.


இந்த வேலைத்திட்டத்தின் போது வீடுகளை இழக்க நேரிடலாம். சாகுபடி நிலங்கள் காடுகளாக மாறக்கூடும். ஆனால் அதைச் செய்தாக வேண்டும், இல்லையெனில் நாம் பெரும் பேரழிவை எதிர்கொள்ள வேண்டி வரும்.


நிறுவனங்களின் அதிகாரங்கள் பிரியலாம், பதவிகள் மாறலாம்... யாரும் கலங்க வேண்டாம்" என்றும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை, மலையக மக்கள் நமது சொந்த சகோதரர்களாக நாட்டில் வாழ்வதற்கு முழு உரிமையையும் வாழ்க்கையையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் ஒரு கட்டமாக தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2042 இல் முடிவடையும் போது, அம்மக்களின் உரிமைகள் பாதுகாப்பக்கப்படும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.


"காணி தொடர்பாக பெரும் பிரச்சினை உள்ளது. தோட்டத்தில் வேலை செய்தாலும் நிறுவனங்கள் இலகுவில் காணிகளை வழங்க விரும்புவதில்லை. ஆனால் இந்த நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2042 இல் முடிவடையவுள்ளன.


ஏற்கனவே அது தொடர்பான அமைச்சு அந்த ஒப்பந்தங்கள் குறித்து மறுஆய்வு செய்ய குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


நாங்கள் மிக விரைவில் அந்த ஒப்பந்தங்களை முடிக்க எதிர்பார்க்கிறோம். அதில் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சரத்துக்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட அவதானம் செலுத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.


இதேவேளை, யுத்த காலத்தில் இலங்கையை விட்டு இந்தியாவிற்கு சென்ற மக்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மலையக மக்கள் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,


"தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு அனைத்து மக்கள் குழுக்களுக்கும் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாகும். அதற்காக பல வீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் வீடமைப்புக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.


அம்மக்களுக்கு நல்ல வருமான வழி தேவை. அதை பூர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது போதுமானதாக இல்லாவிட்டாலும், முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


பிள்ளைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நூற்றாண்டுகளாக இந்த சமூகம் வாழ்ந்த வாழ்க்கையை தங்கள் பிள்ளைகளுக்கு உரிமையாக்குவது நியாயமானது அல்ல.


தோட்டத்தில் பிறக்கிறார்கள், தோட்டத்தில் வேலை செய்கிறார்கள், தோட்டத்தில் இறக்கிறார்கள், தோட்டத்தில் மண்ணாகிறார்கள். அந்த வாழ்க்கையிலிருந்து அவர்கள் வெளியே வர வேண்டும். அந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வருவதற்கு மிக முக்கியமான காரணி கல்வி.


அதேபோல் ஆரோக்கியமான வாழ்விற்காக நல்ல சுகாதார வசதிகள் வழங்கப்படும். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் இந்த மலையக மக்களிலேயே அதிகமாக உள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எங்கிருக்கிறார்கள், ஆயுட்காலம் குறைந்த சமூகம் எங்குள்ளது... அது இந்த மக்களுக்கு இடையேதான்.

எனவே, இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒதுக்கி வைக்கப்பட்ட, ஏறெடுத்தும் பார்க்காத ஆட்சிகளால் இந்த மக்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்" என்றும் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278