Aug 29, 2026 - 04:15 PM





நுவரெலியா வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பிரதான நீர் மூலங்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு மலைப் பகுதிகளை உள்ளடக்கிய 1,500 ஹெக்டயார் நிலப்பரப்பைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டத்தின் சுற்றாடல் பாதுகாப்பு, நிலையான சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு நேற்றைய தினம் (28) நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய, அம்மாவட்டத்தின் சுற்றாடல் மற்றும் நீர்ப்பிடிப்பு வலயங்களைப் பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, நுவரெலியா சுற்றுலா மண்டலத்தில் அமைந்துள்ள விடுதிகள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்களுக்குச் சுற்றாடல் பாதுகாப்பு உரிமங்களை உரிய நடைமுறைகளின்படி விரைவுபடுத்துவதற்கும், கழிவுநீரை முறையான வகையில் அகற்றுவதை உறுதிசெய்து நீர் மூலங்கள் மாசுபடுத்தப்படுவதைத் தடுப்பதற்கான தொடர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கூட்டத்தில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி, கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாநகர முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சூரவீரஆரச்சி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர் உடுவாவல, மாவட்டச் செயலாளர், மேலதிக செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாப்பதன் மூலம் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதும், சட்டவிரோத வன அழிப்பைத் தடுப்பதையும் உறுதிசெய்வதற்காகப் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்துச் சுற்றாடல் மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் சுற்றாடல் அடையாளத்தைப் பாதுகாத்துச் சுற்றுலாப் பயணிகளுக்கும் பிரதேசமக்களும் சாதகமான, பாதுகாப்பான மற்றும் சுற்றாடல் நட்புமிக்க நுவரெலியாவை உருவாக்குவதற்கான அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.























