Aug 29, 2026 - 07:23 PM





கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட யுவதி ஒருவரைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியைப் பொலிஸார் இன்று (29) முறியடித்துள்ளனர்.
இந்தக் கடத்தலை யுவதியின் காதலனே முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்றில் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்படுவதாக இன்று பிற்பகல் 01:30 மணியளவில் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது.
அதற்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றை நிறுத்த முற்பட்டபோதிலும், அது பொலிஸாரின் கட்டளையை மீறி முன்னோக்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
பின்னர், நாரஹேன்பிட்டி - நாவல வீதியில் வைத்து காரை நிறுத்துமாறு மீண்டும் சமிக்ஞை செய்தபோதிலும், அது நிறுத்தப்படாமல் முன்னோக்கிச் சென்றமையினால் பொலிஸார் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது சாரதி காரைக் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், பொலிஸார் நடத்திய சோதனையின் போது, காரினுள் யுவதி ஒருவர் இருந்துள்ளார் என்றும், அவர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்ட யுவதி என அடையாளங் காணப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காரைச் செலுத்தியவர் கடத்தப்பட்ட யுவதியின் காதலன் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் மாத்தறை - வெலிகமை மற்றும் மிதிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகத் தனது குடும்ப உறவினர்களுடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த யுவதி கடத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளதுடன், அவர் கடத்தப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியது யுவதியின் தந்தை எனக் கூறப்படுகின்றது.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், யுவதி இன்று பிற்பகல் கொழும்பு சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதேவேளை, குறித்த கார் கடத்தலை மேற்கொண்ட காதலனுடையது என்றும், அதனை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவிற்கு ஓட்டிவந்துள்ளார் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.
அந்த இளைஞர் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக் குற்றச்சாட்டுகளைக் கொண்டவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைதும் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு திசைக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில், கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் லூஷன் சூரியபண்டார உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.























