Aug 31, 2026 - 12:29 PM





மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக அமல்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (31) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி, காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகயீன விடுமுறை போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக அமுல்படுத்துதல், உரிமைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலை, பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.
குறித்த போராட்டத்தில் மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற பல நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.போராட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஐ சந்தித்து ஜனாதிபதிக்கு கையளிக்க வேண்டிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.























