Aug 31, 2026 - 05:15 PM





ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் குருணால் பாண்டியா மீண்டும் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இந்த ஆல்-ரவுண்டரைத் தேர்வு செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இந்த மூன்று போட்டிகளும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளன.சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் அக்சர் படேல் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டரான குருணால் பாண்டியாவை தேர்வு செய்த தேர்வுக்குழு முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஆறு டி20 போட்டிகளில் அக்சர் படேல் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியதால், மாற்று இடதுகை சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்ய அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. குருணால் பாண்டியா கடைசியாக 2021 ஆம் ஆண்டு கொழும்பில் இலங்கைக்கு எதிராக இந்திய அணிக்காக விளையாடினார்.
2018 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டி20 சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 8.10 என்ற எகானமி ரேட்டில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபகாலமாகக் காயம் காரணமாக விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற முக்கிய வீரர்களின் நிலை குறித்த தகவல்களும் தெரியவந்துள்ளது.
ஆல்-ரவுண்டர்களான நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உடற்தகுதியை எட்டியுள்ளதால் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வாஷிங்டன் சுந்தரும் அணிக்குத் திரும்பும் வாய்ப்பில் உள்ளார். பும்ராவை பொறுத்தவரை, அவர் ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்றாலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் களம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குருணால் பாண்டியாவின் பெயர் பரிசீலனையில் இருந்தாலும், அவர் ஆர்சிபி அணியில் இருந்து இந்திய இறுதி அணியில் இடம் பெறுவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐபிஎல் 2025 ஏலத்தில் ஆர்சிபி அணியால் தேர்வு செய்யப்பட்ட பிறகு, குருணால் பாண்டியாவின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
₹5.75 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட குருணால், ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் கிண்ணத்தை வெல்வதற்கும், 2026 சீசனில் சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் முக்கியப் பங்காற்றினார்.
2025 சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 22.29 சராசரி மற்றும் 8.23 எகானமி ரேட்டில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆர்சிபி அணியின் இரண்டாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரராகத் திகழ்ந்தார். இறுதிப் போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
ஆர்சிபி அணிக்காக விளையாடிய இரண்டு சீசன்களில் மொத்தம் 31 போட்டிகளில் பங்கேற்றுள்ள குருணால் பாண்டியா, 25.94 சராசரி மற்றும் 8.33 எகானமி ரேட்டில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில், 16 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்களுடன் 139 ஸ்டிரைக் ரேட்டில் 335 ஓட்டங்களை எடுத்துள்ளார்.























