Aug 31, 2026 - 05:47 PM





ரயில் 'பவர் செட்' (Power set) மற்றும் ரயில் எஞ்சின் பற்றாக்குறை காரணமாகக் களனிவெலி பாதையில் இரண்டு ரயில் சேவைகளும், பிரதான பாதையில் இரண்டு ரயில் சேவைகளும் உட்பட மொத்தம் 4 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணிக்கவிருந்த ரயிலும், காலை 5.55 மணிக்கு அவிசாவளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் ரயிலும், பவர் செட் இல்லாத காரணத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்தார்.
இதேவேளை, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் பார்சல் போக்குவரத்து ரயிலுக்காக ஈடுபடுத்துவதற்கு ரயில் எஞ்சின் இல்லாததால், இன்றைய தினம் அந்த ரயிலின் இரண்டு சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்வே திணைக்களத்தில் தற்போது தொடர்ந்து ரயில் சேவைகள் ரத்தாவதும், ரயில்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் சாதாரண நிலமையாக மாறியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இந்தச் சூழ்நிலையினால் தினசரி ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.























