Aug 31, 2026 - 07:27 PM





கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' வகை போதைப்பொருளின் அளவு சுமார் 463 கிலோகிராம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, இதன் மதிப்பு 800 கோடி ரூபாய்க்கும் அதிகம் எனப் பதிவாகியுள்ளது.
குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகமும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளன.
இதன்போது சந்தேகத்திற்குரிய இரண்டு கொள்கலன்கள் சோதனையிடப்பட்டுள்ளதுடன், சுங்கப் பிரிவினரின் உதவியுடன் அவை திறக்கப்பட்டுப் போதைப்பொருளின் எடையை அளவிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இதுவரை 463 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருள் கணக்கிடப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தார்.
குறித்த போதைப்பொருள் தொகுதியை நாட்டிற்குள் கொண்டு வந்தது யார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.























