Aug 31, 2026 - 07:58 PM





ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ரஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி நிலவுவது இயல்பான நிலை என்ற போதிலும், இம்முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக அப்பகுதியின் நீர் நிலைகள் வேகமாக வற்றி வருவதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (31) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டுகளை விடவும் தீவிரமடைந்து வரும் இந்த வறட்சி காரணமாக ரஜரட்ட மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், சுற்றாடல் மற்றும் வனவிலங்குகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் உள்ள 2,410 சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் 788 குளங்களின் நீர் முற்றாக வற்றியுள்ளதாகவும், மேலும் 612 குளங்களின் நீர் மட்டம் 5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மொத்த நீர் கொள்ளளவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நீர் 7 பிரதான குளங்களில் மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
நீர் நிலைகள் இவ்வாறு கடுமையாக வற்றி வருவதன் காரணமாகக் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் வனவிலங்குகளின் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் கடும் தடைகள் ஏற்பட்டுள்ளன.























