Sep 1, 2026 - 03:21 PM

ஒவ்வொரு தலைமுறையும் தனது அடுத்த தலைமுறையை எதிர்காலத்திற்காகத் தயார்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. கல்வி முறையின் அடிப்படைக் நோக்கமும் இதுவே. இருப்பினும், உலகம் அதிவேகமாக மாற்றமடைந்து வரும் சூழலில், கற்றல் எங்கெல்லாம் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் நமது பார்வை மெதுவாகவே மாறியுள்ளது.
சர்வதேச இளைஞர் தினத்தை நாம் முன்னெடுக்கும் வேளையில், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. அதேநேரம், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கையிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இணையப் பாதுகாப்பு, மனநலம் மற்றும் திரைப் பயன்பாட்டுக் காலம் (Screen time) பற்றிய இந்தக் கவலைகள் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இதில் நாம் கவனிக்கத் தவறாத மற்றொரு கோணமும் உள்ளது. டிஜிட்டல் தளங்கள் இளைஞர்களின் வாழ்வியலில் நீங்காத இடம்பெற்று வரும் நிலையில், அவை அவர்களின் கற்றலில் எத்தகைய பங்களிப்பைச் செய்கின்றன என்பதைப் பற்றி நாம் சிந்திக்கிறோமா?
இது சமூக ஊடகக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாதம் அல்ல் மாறாக, நமது பார்வையை விரிவுபடுத்துவதற்கான ஒரு அழைப்பு. கற்றல் என்பது வகுப்பறைகளுக்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. இன்று டிஜிட்டல் சமூகங்கள் மூலம் ஆர்வமும், தொழில்சார் அறிவும், நடைமுறைத் திறன்களும் முறைசாரா முறையில் பெறப்பட்டு வருகின்றன.
வகுப்பறைக்கு அப்பாற்பட்ட கற்றல்
கல்வி என்பது வகுப்பறையில் தொடங்கி ஒரு சான்றிதழுடன் முடிவடைவது என்ற தவறான எண்ணம் நிலவுகிறது. ஆனால், வாழ்க்கையின் பல முக்கியமான பாடங்கள் அனுபவம், வழிகாட்டிகள் மற்றும் செயன்முறை வழியிலேயே கற்றுக்கொள்ளப்படுகின்றன. நுட்பியல் வளர்ச்சி காரணமாக, எல்லைகளுக்குட்பட்ட கற்றல் இன்று உலகளாவியதாகவும், உடனடித் தொடர்பு சாத்தியமானதாகவும் மாறியுள்ளது.
இன்று வானியல் இயற்பியலில் ஆர்வமுள்ள ஒரு மாணவர், உலகின் மறுபக்கத்தில் உள்ள ஒரு விஞ்ஞானியிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். #LearnOnTikTok போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் அன்றாடம் புதிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். சமூக ஊடகங்கள் வகுப்பறைகளையோ, ஆசிரியர்களையோ மாற்றுவதற்குப் பதிலாக, கற்றலின் எல்லைகளை விரிவுபடுத்துகின்றன.
சமூக ஊடகங்கள் வகுப்பறையை எவ்வாறு விரிவுபடுத்துகின்றன?
சமூக ஊடகங்களின் பலம் வெறும் தகவல்களை வழங்குவதில் மட்டும் இல்லை. அவை கற்றலை தொடர்ச்சியானதாகவும், காட்சிப்பூர்வமானதாகவும், ஆர்வத்தை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக, TikTok தளம் வெறும் பொழுதுபோக்கையும் தாண்டி அறிவுப் பகிர்வுக்கான தளமாக உருவெடுத்துள்ளது. சரியான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல்களுடன் பயன்படுத்தப்படும்போது, இது வழக்கமான கல்விக்கு ஒரு சிறந்த துணையாக அமைகிறது.
முன்பெல்லாம் ஒரு கடினமான பாடத்தைப் புரிந்துகொள்ள ஆசிரியர் அல்லது பாடப்புத்தகங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று, ஒரு சுற்றுச்சூழல் விஞ்ஞானி பருவநிலை மாற்றம் பற்றிக் கூறுவதையோ அல்லது ஒரு சட்டத்தரணி அன்றாட மொழியில் சட்டங்களைப் விளக்குவதையோ நேரடித் தளங்களில் காண முடிகிறது. #STEMTok, #BookTok போன்றவை இளைஞர்களின் அறிவாற்றலை மேலும் வளர்க்கின்றன.
இத்தகைய கற்றல் பயணம் பெரும்பாலும் திட்டமிட்டுத் தொடங்குவதில்லை. ஒரு சிறு காணொளியில் தொடங்கும் ஆர்வம், பின்னர் நூல்கள், பயிற்சிப் படிப்புகள் என ஆழமான கற்றலுக்கு வழிவகுக்கிறது.
கல்வியின் எதிர்காலம்
TikTok போன்ற தளங்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த உள்ளடக்கங்களுக்கு விசேட முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மருத்துவர்கள், பொருளியல் வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் எனப் பலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, பழங்கால கிரேக்கத்தில் சாக்கரட்டீஸ் போன்ற தத்துவஞானிகள் விவாதங்கள் மூலம் கற்பித்த முறையை நினைவூட்டுகிறது.
சமூக ஊடகங்கள் ஆசிரியர்களுக்கோ, பாடநூல்களுக்கோ மாற்று அல்ல. மாறாக, அவை பாடசாலை நேரத்தைத் தாண்டியும் கற்றலைத் தொடரச் செய்து, புதிய மனிதர்களுடனும் கண்ணோட்டங்களுடனும் இளைஞர்களை இணைக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, அவை உண்மையான தேடலையும் ஆர்வத்தையும் தூண்டுகின்றன.
எதிர்காலக் கல்வி என்பது வகுப்பறையா அல்லது தொழில்நுட்பமா என்ற தேர்வில் இல்லை. அவை இரண்டும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதைப் புரிந்துகொள்வதிலேயே அடங்கியுள்ளது.
எழுதியவர்: இந்திக டி ஜோய்சா (இலங்கை கணினி சங்கத்தின் உப தலைவர்)



























