Sep 2, 2026 - 02:11 PM

அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களிலும் இன்று (02) மதிய உணவு இடைவேளையின் போது அடையாள கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் இன்று மதிய உணவு இடைவேளையில் அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், மாணவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது அரசாங்கத்திற்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான பதாதைகள் மற்றும் கோச அட்டைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன்,
தற்போது பல்கலைக்கழகங்களில் ஐந்து அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், மேலும் இரண்டு அணிகளை உள்வாங்குவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள், விரிவுரை மண்டபங்கள், ஆய்வுகூட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் ஏற்படுத்தப்படாமல் மேலதிக மாணவர்களை இணைத்துக் கொள்வது உயர்கல்வியின் தரத்தைப் பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த விடயங்களில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்தி, பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, போராட்டத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு. சர்வேஸ்வரன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் அதற்கு ஆதரவு வழங்கியதாகத் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையை தற்போதைய அரசாங்கம் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, உயர்கல்வி தொடர்பான பொறுப்புகளைக் கொண்டுள்ள நாட்டின் தற்போதைய பிரதமர் முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பதால், பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர் நன்கு புரிந்துகொண்டு தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய நிலைமைகளைப் பார்க்கும்போது, தாம் கொண்டிருந்த அந்த நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சர்வேஸ்வரன் கவலை வெளியிட்டார்.



























