Sep 3, 2026 - 03:51 PM

அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் அளிப்பதாகவும், யாரும் ஓடிவிடக்கூடாது என்றும் சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேசினார்.
தமிழகத்தில் புதிதாக த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த மாதம் 05 ஆம் திகதி பொது பட்ஜெட்டும், 06 ஆம் திகதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆகஸ்டு 17 ஆம் திகதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று (02) வரை 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கையில் உள்ள பொலிஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (03) நடைபெற்றது.
சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறை என்பதால், விவாதத்தின் போது அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. அரசின் செயல்பாடு குறித்து அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார். அதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்கவில்லை. மாறாக, அமைச்சர்கள் பதில் அளித்து கொண்டிருந்தனர். அதற்கு தி.மு.க. உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்
இதனால், சட்டசபையில் விவாதம் அனல் பறந்தது. இதற்கிடையே யாரும் எதிர்பாராத நேரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
“அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதிலளிப்பேன். நான் இங்கு இல்லை என்றாலும், இங்கு எழுப்பப்படும் அனைத்து கேள்விகளையும் நான் அறிவேன். ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன். பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது.”
அத்துடன், சட்டசபையை விட்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியேறினார். முதலமைச்சரின் இந்த கருத்துக்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோர் பதில் அளித்தனர்.



























