Sep 4, 2026 - 10:49 AM

நிலத்தில் விழுந்து கிடந்த நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த, 37 ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6 ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து நிலத்தில் விழுந்து கிடந்த பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்ததையடுத்து, அவரை உடனடியாகக் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சிறுவன் பழத்தை உண்டபோது நச்சுப் பூச்சி ஏதேனும் கடித்ததா அல்லது நச்சுத்தன்மை காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



























