Sep 6, 2026 - 10:41 PM

சுகாதார சேவையினை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (6) பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப நல வைத்தியர் ஒருவரை நியமிக்கும் வகையில் மருத்துவ மையங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வைத்தியரின் அனுமதியின்றி வைத்தியசாலைக்கு செல்ல முடியாத வகையில் ஒரு முறைமை உருவாக்கப்படும்.
சிலர் சந்தைக்கு சென்றாலும், வைத்தியசாலை செல்கின்றனர்.சந்திக்கு சென்றாலும் வைத்தியசாலை செல்கின்றனர்.
அவ்வாறு செல்ல முடியாது.
தங்களுடைய வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வைத்தியசாலை செல்ல முடியும்.
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் வௌிநோயாளர் பிரிவுகளில் வருடாந்தம் 80 மில்லியன் பேர் மருந்துகளை கொள்வனவு செய்கிறார்கள்.
நாட்டின் சனத்தை 22 மில்லியனே உள்ள போதிலும், வைத்தியசாலைகளில் வருடாந்தம் 80 மில்லியன் பேர் இவ்வாறு மருந்துகளை கொள்வனவு செய்கிறார்கள் என்றால், ஒருவர் தலா 4 தடவைகள் செல்கிறார்கள்.
பரிந்துரை மற்றும் ஒரு கொள்கை இல்லாமையே இதற்கான காரணமாகும்.
நோயாளர்களே தீர்மானிக்கின்றார்கள். எந்த வைத்தியரை சந்திக்க வேண்டும். எங்கு செல்ல வேண்டும் என்று....
யாரை சந்திக்க வேண்டும் என்பதை வைத்தியர்களே தீர்மானிக்க வேண்டும். நோயாளர்கள் அல்ல.
எனவே அடுத்த வருடம் புதிய முறையின் கீழ், 1,000 "ஆரோக்கியா" (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மைப் பராமரிப்பு வைத்தியரை அணுகும் வசதி கிடைக்கும்.
பிரதான வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு முன்னர் நோயாளர்கள் பொதுவாகத் தங்களது முதன்மை மருத்துவரிடமிருந்து பரிந்துரையைப் பெற வேண்டியிருக்கும்.
கொத்தமல்லி குடித்துவிட்டு ஓய்வெடுப்பதன் மூலம் சரிசெய்யக்கூடிய ஒன்று என்றால், வீட்டிற்குச் சென்று ஓய்வெடுங்கள்.
மருந்து பரிந்துரைக்கப்பட்டால், அதை உட்கொள்ளுங்கள். மருந்து கொடுக்கப்பட்டாலும் கூட, மக்கள் அதை முழுமையாக உட்கொள்வதில்லை.
மூன்று நாட்களுக்கு அருந்த வேண்டிய மருந்தை ஒரு வேளையுடன் நிறுத்துகிறார்கள்.
இது ஒரு வீணடிப்பாகும். இது ஒரு குற்றமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.



























