Sep 12, 2026 - 05:47 PM

நாட்டில் ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் அவசர காலங்களில், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பெண்கள், சிறுமிகள் மற்றும் தாய்மார்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக 2 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மனிதநேய உதவிப் பொருட்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளன.
பாதிக்கப்படக்கூடிய பெண்கள், சிறுமிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதும், அத்தகைய சந்தர்ப்பங்களில் அவசியமான சுகாதாரத் தலையீடுகளை விரைவாகச் செயற்படுத்துவதற்கான திறனை மேலும் வலுப்படுத்துவதும், நாட்டின் அனர்த்த முன்னாயத்தத்தை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
அதற்கமைய, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தால் (UNFPA) 250,641 அமெரிக்க டொலர் பெறுமதியான அவசர அனர்த்த மனிதநேய உதவிப் பொருட்கள் நேற்று (11) நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த விசேட உதவித் திட்டத்திற்கு அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் நிதியுதவி வழங்கியுள்ளன.
இந்த அவசர அனர்த்த மனிதநேய உதவிப் பொருட்களில், உயர் திறன் கொண்ட 8 கூடாரங்கள், சூரிய சக்தி விளக்கு அமைப்புகளுடன் கூடிய 3 கூடாரங்கள், குடும்ப நலச் சேவைகளுக்கான 999 நடமாடும் தொகுதிகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான 1,283 பொருள் தொகுதிகள், முதியவர்களுக்கான 246 தொகுதிகள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சுகாதாரப் பாதுகாப்புத் தொகுதிகள் 1,659 என்பன அடங்குகின்றன.
இந்த மனிதநேய உதவிப் பொருட்கள், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களிடம், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பெயின், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரூத் பியர்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதி புன்ட்சோ வங்யெல் ஆகியோரால் நேற்று (11) குடும்ப நலப் பணியகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இந்த விசேட அவசர அனர்த்த மனிதநேய உதவிப் பொருட்கள் அனர்த்த அபாயம் அதிகம் உள்ள மாவட்டங்களில் மூலோபாய ரீதியாக முன்கூட்டியே களமிறக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம், அனர்த்தத்தின் போது வீதிகள் சேதமடைதல் அல்லது பிரதேச உள்கட்டமைப்புக்கள் வீழ்ச்சியடைவதால் ஏற்படக்கூடிய போக்குவரத்துத் தாமதங்களைக் குறைத்து, அவசர காலங்களில் உடனடியாகத் தலையிடும் சுகாதார நிபுணர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் வளங்களை அந்தப் பிரதேசங்களிலேயே பெற்றுக்கொள்ளவும், பொதுமக்களுக்கு அவசியமான அவசர சுகாதார சேவைகளை விரைவாக வழங்கவும் இயலுமாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் குமார விக்ரமசிங்க, பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் விசேட வைத்தியர் விந்தியா குமாரபெரும, குடும்ப நலப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திரம சிறிதுங்க உள்ளிட்ட துறைசார் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.





























