Sep 14, 2026 - 05:05 PM

நடப்பு ஆண்டில் இதுவரை மின் மற்றும் மின்னணு பொருட்கள் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் சட்ட இணக்கம், பொருட்களின் பாதுகாப்பு மற்றும் விநியோக ஆதாரங்களை கண்டறிதல் ஆகியவற்றில் இந்தச் சோதனைகளின் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை கூறியுள்ளது.
இதனிடையே, நுகர்வோருக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட மின் மற்றும் மின்னணு பொருட்கள் சந்தையை உறுதி செய்யும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் விசேட சோனை நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதன் பிரதான விசேட சோதனை நடவடிக்கை கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட சோதனைத் திட்டத்தின் கீழ் மட்டும் வணிக நிறுவனங்கள் தொடர்பாக 204 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அந்த சோதனைகளின் போது 1,150க்கும் மேற்பட்ட பொருட்கள் வழக்கு பொருட்களாக அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இந்த விசேட சோதனைகளின் போது சரியான பில்கள், ரசீதுகள் மற்றும் விலைப்பட்டியல்களை பராமரிக்காமை, பொருளின் விநியோக ஆதாரத்தை உறுதிப்படுத்த முடியாமை, உரிய லேபிள்கள் மற்றும் பொருட்களின் தரத்திற்கு அமையாத பிளக்குகள், பல்முனை சொக்கெட்டுகள், நீட்டிப்பு மின் கம்பிகள் மற்றும் பிற மின்சார பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அது தொடர்பான பிற சட்டத் தேவைகளை மீறுதல் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சம்பந்தப்பட்ட மின் மற்றும் மின்னணு பொருட்களுக்கு குறைந்தபட்சம் 06 மாத உத்தரவாதம் (Warranty) வழங்குதல் மற்றும் அதற்காக உரிய உத்தரவாதச் சான்றிதழை நுகர்வோருக்கு வழங்குவது குறித்தும் தீவிர கவனம் செலுத்தப்பட்டதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோர் பொருளைக் கொள்வனவு செய்யும்போது வாய்மொழியாக உத்தரவாதம் உள்ளது என்று கூறுவது மட்டும் போதுமானதாகாது என்றும், தொடர்புடைய உத்தரவாதக் காலம், நிபந்தனைகள் மற்றும் பொறுப்பான தரப்பினரை அடையாளம் காணும் வகையில் எழுத்துப்பூர்வ உத்தரவாதச் சான்றிதழைப் பெறுவது முக்கியமானது என்றும் அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சோதனைகளின் போது நீட்டிப்பு மின் கம்பிகள், பல்முனை சொக்கெட்டுகள், பிளக் டாப்கள், சுவிட்ச் சொக்கெட்டுகள், மின்கம்பிகள், எல்.ஈ.டி. விளக்குகள், சார்ஜர்கள், அடாப்டர்கள், டார்ச்சுகள், மின்னணு தராசுகள், கெட்டில்கள், மின்இஸ்திரிகள், மின்சார கருவிகள் உள்ளிட்ட பல்வேறு மின்சார மற்றும் மின்னணு பொருட்கள் தொடர்பான சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் கிடைக்கப்பெறும் சான்றுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குற்றத்திற்குப் பொறுப்பான வர்த்தகருக்கு எதிராக மட்டுமன்றி, குற்றத்துடன் தொடர்புடைய விநியோகஸ்தர்கள், விநியோகிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் அல்லது உற்பத்தியாளர்களுக்கு எதிராகவும் உரிய சட்டங்களின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.





























