May 26, 2025 - 10:52 AM -
0
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று அங்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.
பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள லாகூர், ஷேகுபுரா, நங்கனா சாஹிப், அட்டாக், முல்தான், ராஜன்பூர், ஹபிசாபாத், மியான்வாலி, ஜாங் குஜ்ரன்வாலா, லாயா உள்ளிட்ட நகரங்களில் கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகனங்கள் வீதிகளில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சூரைக்காற்று காரணமாக வீட்டின் மேற்கூரைகள், மின்சார கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்து தூக்கி வீசப்பட்டன. இதனால் அங்கு மின்சார விநியோகம் தடைபட்டது. மோசமான வானிலையால் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 100இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.
இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, விளம்பர பலகைகள் வீழ்ந்தமை உள்ளிட்டவற்றால் பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 150இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 2,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.