Jun 1, 2025 - 07:23 AM -
0
சிகரெட்டானது அதனைப் புகைப்பவருக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள மக்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது. சிகரெட் புகையானது நுரையீரல், இதயம் மற்றும் சுவாச நோய்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிகரெட் புகை மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால்தான், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உள்ள அரசுகள் பொது இடங்களில் புகைபிடிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தச் சூழலில் சிகரெட் புகைப்பது தொடர்பாக ஃபிரான்ஸ் முக்கிய விதியை வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் கடுமையாக அமல்படுத்த உள்ளது. பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றிலுமாகத் தடைசெய்ய இந்தப் பெரிய முடிவை அந்நாடு எடுத்துள்ளது.
குழந்தைகள் அடிக்கடி செல்லும் இடங்களான கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து வெளிப்புற இடங்களிலும் புகைபிடிப்பதை ஃபிரான்ஸ் தடைசெய்ய உள்ளது.
இந்தத் தகவலை அந்நாட்டின் சுகாதார மற்றும் குடும்ப அமைச்சர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
"குழந்தைகள் அதிகம் புழங்கும் இடத்தில் புகையிலை பயன்பாடு முற்றிலும் இல்லாமல் இருக்க வேண்டும்" என்று பிராந்திய ஓவெஸ்ட்-பிரான்ஸ் நாளிதழ் வெளியிட்ட ஒரு நேர்காணலில் கேத்தரின் வௌட்ரின் கூறி உள்ளார்.
வெளிப்புற இடங்களில் முழுமையாகத் தடை
வரும் ஜூலை 1 முதல், நாட்டின் அனைத்து பொது வெளிப்புற இடங்களிலும் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படும் என்று பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது. கடற்கரைகள், பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகளுக்கு வெளியே மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற குழந்தைகள் அதிகம் வரும் இடங்களுக்கு இந்தத் தடை முக்கியமாகப் பொருந்தும் என்று அந்நாட்டின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் கூறினார்.
குழந்தைகள் இருக்கும் இடங்களில் புகையிலையை ஒழிக்க வேண்டும் என்று அரசு தெளிவாக இருப்பதாகக் கூறியுள்ளார். புகைபிடிக்க அளிக்கப்படும் சுதந்திரம் காரணமாக "சுத்தமான காற்றை சுவாசிக்கும் குழந்தைகளின் உரிமை எங்கிருந்து தொடங்குகிறதோ அங்கு நின்றுவிடுகிறது". ஜூலை 1 முதல் அமுலாக உள்ள விதியை மீறுபவர்களுக்கு 35 யூரோக்கள் ($154) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். ஃபிரான்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, கஃபே மொட்டை மாடிகளுக்கு (cafe terraces) புகைபிடிக்கும் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேலும், இந்தத் தடையில் எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் அடங்காது. அதாவது, தடை அமலுக்கு வந்தபிறகும் கூட, தடை இருக்கும் இடங்களில் மக்கள் புகைபிடிக்க எலெக்ட்ரானிக் சிகரெட்டுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். புகையிலை தொடர்பான பாதிப்புகளால் பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 75,000 பேர் இறக்கின்றனர். சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, பிரெஞ்சு மக்களில் 62 சதவீதம் பேர் அல்லது ஒவ்வொரு பத்து பேரில் ஆறு பேர், பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்வதை ஆதரிக்கின்றனர்.
இதனிடையே French Observatory of Drugs and Addictive Behaviours நடத்திய மற்றொரு ஆய்வில், பிரெஞ்சு மக்களிடையே, குறிப்பாக 17 வயதுடையவர்களிடையே தினசரி புகைபிடித்தல் வீதம் குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி 2011 முதல் 17 வயது உடையவர்களிடையே தினசரி புகைபிடித்தல் 15.9% புள்ளிகள் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வேப்பிங் பிரபலமடைந்து வருகிறது, 17 வயதுடையவர்களில் 56.9 சதவீதம் பேர் இதை முயற்சித்துள்ளனர்.